அரிமளம்,
அரிமளம் ஒன்றியம் கடையக்குடி கிராமத்தில், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு தமிழக வீட்டு வசதி வாரிய தலைவர் வைரமுத்து தலைமை தாங்கினார். செந்தில்நாதன் எம்.பி. முன்னிலை வகித்தார். விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து பேசுகையில், கடையக்குடி கிராமத்திற்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என கடையக்குடி திலகர் கேட்டுள்ளார். கடையக்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு சாத்தியக்கூறுகள் இருந்தால், அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
மிகப்பெரிய வெற்றி பெறுவதாலும், தொடர்ந்து வலுவோடு இருப்பதாலும், நிறைய பேருக்கு பொறாமை ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறோம் என்றார். இதில் மத்திய தொலைத் தொடர்பு ஆலோசனை குழு உறுப்பினர் பாஸ்கர், முன்னாள் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சந்திரன், அரிமளம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கணேசன், முன்னாள் பேரூராட்சி தலைவர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அரிமளம் முன்னாள் ஒன்றியக் குழு துணை தலைவர் கடையக்குடி திலகர் வரவேற்றார். முடிவில் முன்னாள் கடையக்குடி ஊராட்சி மன்ற தலைவர் இன்பவள்ளி திலகர் நன்றி கூறினார்.