மாவட்ட செய்திகள்

மந்திராலயாவில் அகற்றப்பட்டதாக கூறப்படும் 900 டன் கட்டிட கழிவுகள் உருவானது எப்படி?

மந்திராலயாவில் அகற்றப்பட்டதாக கூறப்படும் 900 டன் கட்டிட கழிவுகள் உருவானது எப்படி? என்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே கேள்வி எழுப்பினார்.

மும்பை,

மும்பை தலைமை செயலக மான மந்திராலயாவில் சமீபத்தில் சுமார் 900 டன் அளவிலான கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த பணிகளின் விவரங்கள் எதுவும் அரசு சார்பில் ஆவணப்படுத்தப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் மும்பையில் தனியார் செய்தி தொலைக் காட்சிக்கு பேட்டி அளித்த சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே (தேசியவாத காங்கிரஸ்) கூறியதாவது:-

மந்திராலயாவில் முறை யாக ஆவணப்படுத்தாமல் 900 டன் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டு இருப்பது மிகவும் ஆச்சரியமளிக்கிறது. முதலில் இந்த அளவில் கட்டிட கழிவுகள் எப்படி மந்திராலயாவில் உருவாகின?, யாருடைய அதிகாரத்தின் கீழ் இந்த பணிகள் முடிக்கப்பட்டன?, எந்த வகையான வாகனங்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டன?. இந்த கேள்விகளுக்கெல்லாம் மாநில அரசு கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும்.

ஏற்கனவே மந்திராலயாவில் எலிகள் கொல்லப்பட்டது மற்றும் பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப்பட்ட டீ செலவு ஆகியவை குறித்து சந்தேகங்கள் நிலவி வருகின்றன. இந்தநிலையில் மாநிலத்தின் தலைமை செயலகத்தில் நடைபெற்ற பணிகள் தெளிவாக ஆவணப்படுத்தப்படவில்லை என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.