மும்பை,
மும்பை பாண்டுப்பில் உள்ள ஸ்ரீராம்பாடாவில் கட்டிடம் முன்பு குடியிருப்புவாசிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தனர். நேற்று அதிகாலை ஒரு மோட்டார்சைக்கிள் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் தீ அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்ற வாகனங்கள் மீதும் பரவியது.
இதன் காரணமாக கரும்புகையை கக்கியபடி தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.
முன்விரோதம் காரணம்
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாகனங்களில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11 மோட்டார்சைக்கிள்கள் மற்றும் 2 கார்கள் என மொத்தம 13 வாகனங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின.
சம்பவ இடத்திற்கு பாண்டுப் போலீசார் வந்து விசாரணை நடத்தினார்கள். இதில் முன்விரோதம் காரணமாக மர்மஆசாமிகள் வாகனங்களை தீ வைத்து எரித்தது தெரியவந்தது. வாகனங்களுக்கு தீ வைத்த மர்மஆசாமிகளை அடையாளம் காண்பதற்காக போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.