மாவட்ட செய்திகள்

பூந்தமல்லியில் டாஸ்மாக் பாரில் கத்திமுனையில் மதுபாட்டில்களை தூக்கி சென்ற மர்மகும்பல்

பூந்தமல்லியில் டாஸ்மாக் பாரில் கத்திமுனையில் மதுபாட்டில்களை தூக்கி சென்ற மர்மகும்பல் வீட்டில் பதுங்கி இருந்த 2 பேரை மடக்கி பிடித்த போலீசார்.

பூந்தமல்லி,

பூந்தமல்லி அடுத்த குமணன் சாவடி பகுதியில் ஒரே இடத்தில் 5 மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் மதுபான கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அரசு அறிவித்துள்ளது. டாஸ்மாக் பார்கள் செயல்பட அனுமதி இல்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள பார்களில் கள்ளச்சந்தையில் சிலர் மதுபானங்களை விற்று வந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் பட்டா கத்தியை எடுத்து சுழற்றி உள்ளனர். இதனால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். பின்னர் அந்த நபர்கள் கத்திமுனையில் மிரட்டி அங்கிருந்த ஒரு பெட்டியில் இருந்த மதுப்பாட்டில்கள் மற்றும் மதுவை விற்ற நபரிடமிருந்து செல்போன், பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு சென்றனர்.

இதையறிந்த பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் சிபுகுமார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதையடுத்து கரையான்சாவடியில் உள்ள வீட்டிற்குள் பதுங்கி இருந்த குமணன்சாவடியை சேர்ந்த பாரதிராஜா (வயது 20), முபாரக் அலி (21), ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து கத்தி, பணம், மதுபானங்களை பறிமுதல் செய்தனர்.