மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் விவசாயி தர்ணா

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் விவசாயி தர்ணா நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் தாலுகா மூரார்பாளையம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முனியன். விவசாயியான இவர் தனக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் கேனை வைத்துக்கொண்டு குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுபற்றிய தகவல் அறிந்த கலெக்டர் ஸ்ரீதர் முனியனை நேரில் வரவழைத்து அவரை சமாதானப்படுத்தினார். அப்போது முனியன் கலெக்டரிம் கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் நானும் எனது அண்ணன் மதுரை ஆகிய இருவரும் சேர்ந்து கடந்த 1987-ம் ஆண்டு அசலன் குடும்பத்தினரிடம் 4 ஏக்கர் நிலத்தை கிரயம் பெற்று விவசாயம் செய்து வருவதாகவும், அதே பகுதியை சேர்ந்த நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எங்கள் நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதோடு, எங்களை உயிரோடு எரித்து கொலை செய்து விடுவோம் என மிரட்டி வருவதாகவும், எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்தார். இதையடுத்து முனியன் போராட்டத்தை கைவிட்டு குடும்பத்துடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். குடும்பத்துடன் விவசாயி நடத்திய தர்ணா போராட்டத்தால் கள்ளக்குறிச்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.