மாவட்ட செய்திகள்

வடக்கனந்தல் பேரூராட்சியில் 7 குளங்களை தூர்வார ரூ 75 லட்சம் நிதி ஒதுக்கீடு உதயசூரியன் எம் எல் ஏ தகவல்

வடக்கனந்தல் பேரூராட்சியில் 7 குளங்களை தூர்வார ரூ 75 லட்சம் நிதி ஒதுக்கீடு உதயசூரியன் எம் எல் ஏ தகவல்

கச்சிராயப்பாளையம்

நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வடக்கனந்தல் பேரூராட்சிக்குட்பட்ட செட்டிகுளம் குளத்தை தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது. இதற்கு பேரூராட்சி தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். துணை தலைவர் தண்டபாணி, கள்ளக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் ஆறுமுகம் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் சங்கராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு குளத்தை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசும்போது, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் அனைத்து பேரூராட்சிகளிலும் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை நடைபெற உள்ளது. அதன்படி வடக்கனந்தல் பேரூராட்சியில் உள்ள வடக்கனந்தல் செட்டிகுளம் மற்றும் தெப்பக்குளம், அம்மாபேட்டை நல்ல தண்ணீர்குளம் மற்றும் ஆத்தூரன்குளம், அக்கராயப்பாளையம் நெல்லிக்குளம், வெங்கடாம்பேட்டை குளம், கச்சிராயப்பாளையம் குளம் ஆகிய 7 குளங்களை தூர்வார ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை அந்தந்த வார்டில் உள்ள பொதுமக்கள் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்து பயன் பெறலாம். அதற்காக கூலி வழங்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி ஒன்றிய தி.மு.க. செயலாளர் அரவிந்தன், வார்டு கவுன்சிலர்கள் முகேஷ், மகேந்திரன், பழனி, இலக்கியாகுணசேகரன் மற்றும் நிர்வாகிகள் தசரதன், முத்து, ஜெயவேல், கரிகாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.