மாவட்ட செய்திகள்

வருமான வரித்துறையினர் ஆர்ப்பாட்டம்

கோரிக்கையை வலியுறுத்தி வருமானவரிதுறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தினர், மதிய உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வருமான வரி கணக்குகளை பரவலான முறையில் தேர்வு செய்து, ஆன்லைன் வாயிலாக ஆய்வு செய்யும், முகமறியா மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், வழக்கமான பணிகளுடன் அதிகமான முகமறியா மதிப்பீடு செய்யும் கணக்குகளும், நவம்பரில் வழங்கப்பட்டது.

இரண்டு பணிகளும் சேர்ந்ததால், பணிச்சுமை அதிகரித்துள்ளது. ஆனால், இதற்கான அவகசாம், வரும் 31-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த அவகாசத்தை செப்டம்பர் வரை நீட்டிக்க, வருமான வரித்துறை ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, வருமானவரிதுறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தினர், மதிய உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான வருமான வரி அலுவலகம் உட்பட, மாநிலம் முழுதும் உள்ள வருமான வரி அலுவலகத்தில், இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, தங்களது கோரிக்கையை நிறைவேற்றக்கோரி, ஊழியர்கள் முழக்கமிட்டனர். இது தொடர்பான கடிதத்தையும், மத்திய நிதி மந்திரிக்கு சங்கத்தினர் அனுப்பி வைத்தனர்.