தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இணைய மேட்ரிமோனி தளங்களை பயன்படுத்தி திருமணத்திற்கு வரன் தேடும் ஆண்கள் மற்றும் பெண்களை குறிவைத்து நடைபெறும் மோசடிகள் தற்போது அதிகரித்து வருகின்றன.
அதன்படி மோசடியாளர்கள் உயர்ந்த கல்வி, வெளிநாட்டு வேலை, பெரிய வருமானம் போன்ற தகவல்களுடன் போலி மேட்ரிமோனி கணக்குகளை தொடங்கி சுயவிபரத்தை பதிவு செய்கின்றனர். பின்னர் திருமண வரன் தேடுபவர்களை குறிவைத்து மெசேஜ், வீடியோ கால் மூலம் தொடர்பை மேலும் நெருக்கம் ஏற்படுத்துகின்றனர். பின்னர் இதனை பயன்படுத்தி மோசடி நபர்கள் தங்களுக்கு மருத்துவ செலவு, வெளிநாட்டு வேலை மற்றும் முதலீடு போன்ற காரணங்களை முன்வைத்து பணம் கேட்கின்றனர். இதனை நம்பி பாதிக்கப்பட்ட நபர் பணத்தை அனுப்பியதும் மோசடியாளர் தொடர்பை துண்டித்து தலைமறைவாகி விடுகின்றனர்.
இதுபோன்ற மோசடிகளை தவிர்ப்பதற்கு முதலில் மேட்ரிமோனி தளங்களில் வரும் சுயவிபரங்களை முழுமையாக சரிபார்க்க வேண்டும். திருமண வரன் தொடர்பாக நேரில் சந்தித்தோ அல்லது அதிகாரப்பூர்வ ஆவணங்களை சரிபார்த்தோ உறுதி செய்ய வேண்டும். இதுபோன்ற போலியான வார்த்தைகளை நம்பி எந்த காரணத்திற்காகவும் தெரியாத நபர்களுக்கு பணம் அனுப்பக்கூடாது.
மேலும் இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான திருமண தொடர்புகள் வந்தாலோ அல்லது மோசடியில் சிக்கி கொண்டாலோ உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ, சைபர் குற்ற உதவி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்யுமாறு பொதுமக்கள் நலன் கருதி தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.