முதுமலையில் சாலையோரம் காட்டு யானை நிற்கும் காட்சி. 
மாவட்ட செய்திகள்

முதுமலை சாலையோரம் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

முதுமலை சாலையோரம் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

கூடலூர்,

கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. தற்போது வனப்பகுதியில் ஏற்பட்டு உள்ள வறட்சி காரணமாக, உணவு தேடி காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இடம்பெயர தொடங்கி உள்ளது.

அதுபோன்று மாயாறு ஆற்றுக்கு தண்ணீர் குடிக்கவும் வந்து செல்கின்றன. இந்த நிலையில் கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ் சாலை மற்றும் முதுமலையில் இருந்து மசினகுடிக்கு செல்லும் சாலை யோரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது. அடிக்கடி சாலையை கடந்தும் வருகிறது.

இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள், வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுத்தல், தொந்தரவு செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை தடுக்க வனத்துறையினரும் அடிக்கடி ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். இருந்தபோதிலும் சுற்றுலா பயணிகள் வரம்பு மீறும் செயல்கள் அதிகரித்து உள்ளன.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, முதுமலை சாலையோரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் வாகனங்களை அதிவேகமாக இயக்கக் கூடாது. வாகனங்களை நிறுத்தி, காட்டுயானைகளை தொந்தரவு செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.