மாவட்ட செய்திகள்

பூச்சொரிதல் விழா நடத்தி நூதன போராட்டம்

கீரனூரில் அனைத்து ரெயில்களும் நின்று செல்லக்கோரி பூச்சொரிதல் விழா நடத்தி நூதன போராட்டம் நடைபெற்றது.

கீரனூர்,

கீரனூர் ரெயில் நிலையத்தில் சென்னை-திருச்சியில் இருந்து ராமேஸ்வரம்-காரைக்குடி சென்ற அனைத்து ரெயில்களும் நின்று சென்று வந்தது. இதனால் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயனடைந்து வந்தனர். கொரோனா காலக்கட்டத்தில் பயணிகள் ரெயில்கள் எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றப்பட்டு கீரனூரில் நிறுத்தம் இல்லை என அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அனைத்து தரப்பினரும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் ரெயில்வே நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இந்தநிலையில் அறவழிப் போராட்டக்குழுவினர் கீரனூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்லக்கோரி நூதன போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன்படி கீரனூர் காந்தி சிலையில் இருந்து பால்குடம், காவடி, தீச்சட்டி ஏந்தியும், பெண்கள் முளைப்பாரி சுமந்தும், சிலம்பாட்டம் நடத்தி தாரை தப்பாட்டத்துடன் ரெயில் நிலையம் வரை பொதுமக்கள் நடந்து சென்று ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம் நடத்தி ரெயிலை நிறுத்த வேண்டும் எனக்கோரி பூச்சொரிதல் விழா நடத்தினர். இந்த நூதன போராட்டத்தில் பொதுமக்கள், வியாபாரிகள், சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்ட அன்னதானம் நடைபெற்றது.