மாவட்ட செய்திகள்

நகைகளை மீட்டு தர கலெக்டரிடம் வலியுறுத்திய கிராம மக்கள்

நகைகளை மீட்டு தர வேண்டும் என கிராம மக்கள் கலெக்டரிடம் வலியுறுத்தினர்.

விருதுநகர்,

திருச்சுழி தாலுகாவில் உள்ள சிறுவனூர், வாகைகுளம் மற்றும் அழகாபுரி கிராம மக்கள் முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சுழி தாலுகாவில் உள்ள அழகாபுரி, வாகைகுளம், சிறுவனூர் கிராமங்களை சேர்ந்தவர்கள் அழகாபுரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நகைகளை அடகு வைத்துள்ளோம். 300 விவசாயிகள் நகைகளை அடகு வைத்துள்ள நிலையில் எங்கள் நகைகளை மீட்க முடியாமல் தவித்து வருகிறோம். இதுபற்றி கேட்டால் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என்று காரணம் கூறி எங்களை அலைக்கழிக்கின்றனர். நகைகளை பற்றி எந்த தகவலும் இல்லை. நகைகள் என்ன ஆனது என்றும் தெரியவில்லை. அந்த சங்க நிர்வாகிகள் மோசடி செய்துள்ளநிலையில் அவர்கள் மீது உரிய முறையில் நடவடிக்கை எடுத்து அடகு நகைகளை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. கிராம மக்கள் முதல்-அமைச்சருக்கான மனுவை கலெக்டரிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்கக்கோரி அவரை முற்றுகையிட்டனர். கலெக்டர் மேகநாத ரெட்டி உரிய நடவடிக்கை எடுத்து நகைகளை மீட்டுத் தருவதாக உறுதியளித்தார்.