மாவட்ட செய்திகள்

கீழ்பென்னாத்தூர், விறகுக்கட்டையால் அடித்து மனைவி கொலை

கீழ்பென்னாத்தூர் அருகே தகராறில் ஆத்திரம் அடைந்த கணவர், தனது மனைவியை விறகுக்கட்டையால் அடித்துக் கொலை செய்தார். இதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் அருகே தகராறில் ஆத்திரம் அடைந்த கணவர், தனது மனைவியை விறகுக்கட்டையால் அடித்துக் கொலை செய்தார். இதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.

பலரிடம் கடன் வாங்கியிருந்தார்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகில் உள்ள ஆராஞ்சி மதுராராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 67), விவசாயி.

இவரின் மனைவி மல்லிகா (60). ராஜமாணிக்கம் பலரிடம் கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று இரவு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்த ராஜமாணிக்கம் வீட்டில் கிடந்த விறகுக்கட்டையை எடுத்து மனைவி மல்லிகாவை கழுத்து, தலை ஆகிய பகுதிகளில் பலமாக தாக்கினார்.

அதில் சுருண்டு கீழே விழுந்த மல்லிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கைது

இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மல்லிகாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவியை அடித்துக் கொலை செய்த ராஜமாணிக்கத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.