கோவில்பட்டி,
சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை தி.மு.க. கூட்டணி கட்சியினர் முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி நகரசபையில் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சொத்து வரி வசூலிக்கப்பட்டது. இதனை 3 மண்டலங்களாக மாற்றி, சொத்து வரி கட்டணம் உயர்த்தப்பட்டது. எனவே உயர்த்தப்பட்ட சொத்து வரி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். 3 மண்டலங்களில் உள்ள தெருக்களை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, தி.மு.க. கூட்டணி கட்சியினர் நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தி.மு.க. நகர செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். ம.தி.மு.க. நகர செயலாளர் பால்ராஜ், நகர காங்கிரஸ் தலைவர் சண்முகராஜ், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் பரமராஜ், நகர துணை செயலாளர் முனியசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் காஜா மீரான், இளைஞர் அணி செயலாளர் சம்சுகனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சூரியகலாவிடம் கோரிக்கை மனு வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.
கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையெனில், வருகிற 22ந் தேதி (திங்கட்கிழமை) கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும், 25ந்தேதி (வியாழக்கிழமை) கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு சாலைமறியலில் ஈடுபடுவதாகவும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் தெரிவித்தனர்.