மாவட்ட செய்திகள்

தட்சிணகன்னடா, குடகு, சிக்கமகளூருவில் கனமழை : கே.ஆர்.எஸ்., கபினி அணைகள் மீண்டும் நிரம்பின

தட்சிணகன்னடா, குடகு, சிக்கமகளூருவில் கனமழை கொட்டி தீர்த்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகள் நேற்று மீண்டும் நிரம்பின.

தமிழகத்திற்கு காவிரியில் இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 1.15 லட்சம் கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தொடங்கிய முதல் நாளிலேயே தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் ஆகிய கடலோர மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது.

இதனால் மங்களூரு நகரமே வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதேப்போல பெங்களூரு நகரம், புறநகர் உள்பட மாநிலம் முழுவதும் பருவமழை பெய்தது. இந்த பருவ மழையால் மாநிலத்தில் உள்ள அணைகள் முழுவதும் வேகமாக நிரம்பின.