சேலம்:-
சேலம் சின்னதிருப்பதி பகுதியை சேர்ந்தவர் ஷாகின் பானு (வயது 38). இவரை ஒரு திருட்டு வழக்கில் அழகாபுரம் போலீசார் கைது செய்து சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் கோர்ட்டில் நடந்து வருகிறது. ஜாமீனில் வெளியே வந்த ஷாகின் பானு வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது. தலைமறைவான ஷாகின் பானுவை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். போலீசார் விசாரணையில் அவர் மேலும் சில திருட்டுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. அவருடைய வீட்டில் இருந்து 17 கிராம் தங்க நகை, 700 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவை மீட்கப்பட்டன. ஷாகின் பானுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.