மாவட்ட செய்திகள்

மேச்சேரி அருகே லாரி மோதி 2 வாலிபர்கள் பலி

மேச்சேரி அருகே லாரி மோதி 2 வாலிபர்கள் பலியானார்கள்.

மேச்சேரி,

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள காமனேரி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 24). இவர் ஓமலூரில் உள்ள ஒரு பெயிண்டு கடையில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். எம்.என்.பட்டி கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் பிரவின் (23), நெசவுத்தொழிலாளி. இவர்கள் 2 பேரும் நண்பர்கள்.

இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் நேற்று ஓமலூருக்கு சென்றனர். பின்னர் மாலை அங்கிருந்து அவர்கள் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். ஓமலூர்-மேச்சேரி சாலையில் காமனேரி பஸ் நிறுத்தம் அருகில் வந்த போது, எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜா, பிரவின் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.