ஈரோட்டில் எலுமிச்சை பழம் கிடுகிடுவென உயர்ந்து நேற்று ஒரு கிலோ ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டது.
எலுமிச்சை பழம் விலை உயர்வு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அனல் காற்றுடன் வெயில் கொளுத்துவதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். கோடை காலம் தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் எலுமிச்சை பழம் ஜூஸ் விரும்பி பருகி வருகிறார்கள். கோவில் திருவிழாக்கள் தொடர்ச்சியாக நடந்து வருவதாலும் எலுமிச்சை பழம் தேவை அதிகரித்துள்ளது.
மேலும் எலுமிச்சை பழம் வரத்து குறைய தொடங்கி உள்ளதாலும் விலை உயர தொடங்கி உள்ளது. ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் செயல்பட்டு வரும் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு தென்காசி, பெங்களூரு, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இருந்து தினமும் 4 டன் எலுமிச்சை பழங்கள் வரத்து இருந்தது.
ரூ.250-க்கு விற்பனை
இதன் காரணமாக கடந்த மாதம் ஒரு எலுமிச்சை பழம் ரூ.3 முதல் ரூ.7 வரை விற்பனையாகி வந்தது. தற்போது தேவை அதிகரித்து வரத்தும் குறைந்து உள்ளதால் கடந்த 10 நாட்களாக எலுமிச்சை பழம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு நேற்று தென்காசி மற்றும் பெங்களூருவில் இருந்து ஒரு டன் எலுமிச்சை பழம் மட்டுமே வந்தது. நேற்று ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.250 -க்கு விற்பனை ஆனது. சில்லரை விற்பனையில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.7 முதல் முதல் ரூ.15 வரை விற்பனையாகி வருகிறது.