மாவட்ட செய்திகள்

உரங்கள் விற்பனையில் விதிமீறல் கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து அதிகாரி எச்சரிக்கை

உரங்கள் விற்பனையில் விதிமீறல் கண்டறியப்பட்டால், உரிமம் ரத்து செய்யப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ராஜேந்திரன் எச்சரித்துள்ளார்.

கிருஷ்ணகிரி:

உரங்கள் விற்பனையில் விதிமீறல் கண்டறியப்பட்டால், உரிமம் ரத்து செய்யப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ராஜேந்திரன் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயிர் சாகுபடி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் யூரியா 1,442 டன், டி.ஏ.பி. 897 டன், பொட்டாஷ் 389 டன், காம்பளக்ஸ் 3,802 டன் மற்றும் எஸ்.எஸ்.பி. 159 டன் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மானிய உரங்கள் அரசு நிர்ணயம் செய்துள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும்.

விவசாயிகளிடம் ஆதார் பெற்று விற்பனை முனைய கருவியில் கைரேகை பதிவு செய்து, சாகுபடி செய்யப்படும் பயிருக்கு தேவைப்படும் உரங்கள் மட்டுமே வழங்க வேண்டும். விற்பனை செய்யப்பட்ட உரங்களுக்கு உரிய ரசீது வழங்கி, விவசாயிகளின் கையொப்பம் பெற்று பதிவேடுகள் பராமரிக்க வேண்டும். மானிய உரங்கள் விற்பனை செய்யும் போது சில உர விற்பனையாளர்கள், விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக இதர இடுபொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்கின்றனர்.

உரிமம் ரத்து

இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படும் நிலை உள்ளது. விவசாயிகள் கேட்கும் உரங்களை மட்டுமே வழங்க வேண்டும். இதர இடுபொருட்களை விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது. உரங்களின் விலை, இருப்பு விபரங்கள் தகவல் பலகையில் விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் தினமும் குறிப்பிட வேண்டும்.

உர மூட்டைகளில் அச்சிடப்பட்டுள்ள விலைக்கே விற்பனை செய்ய வேண்டும். பிற மாநிலம் மற்றும் பிற மாவட்ட விவசாயிகளுக்கு எக்காரணத்தை கொண்டும் உரங்கள் வழங்கக்கூடாது. உரகட்டுப்பாடு சட்டம் 1985-க்கு உட்பட்டு விற்பனை செய்ய வேண்டும். விதிமீறல்கள் கண்டறியப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.