தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வசந்தரேகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உர விற்பனையாளர்கள் விற்பனை உரிமத்தில் அனுமதி வழங்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே உரங்களை கொள்முதல் செய்யவேண்டும். மூட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும். விற்பனையின் போது உரிய ரசீது வழங்க வேண்டும். உர விற்பனை நிலையங்களில் தகவல் பலகையில் இருப்பில் உள்ள விவரங்கள் மற்றும் விலை விவரங்களை தினமும் எழுதி வைக்கவேண்டும். உரம் கொள்முதல் பட்டியல்கள், இருப்பு பதிவேடுகளை சரியாக பராமரிக்க வேண்டும். மானிய விலை உரங்களை விவசாயிகளாக இல்லாதவர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது. தர்மபுரி மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட மானிய விலை உரங்களை, தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும். உரிய ஆவணமின்றி உர விற்பனையில் ஈடுபட்டாலோ, உரங்கள் வாங்கும்போது வேறு உரங்களை வாங்குமாறு கட்டாயப்படுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உர விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.