கலவை,
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த மேல் புதுப்பாக்கம் கிராமத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை சார்பில் மாநில சமச்சீர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.62 லட்சத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு சமுதாய தானிய சேமிப்பு கிடங்கு கட்டி திறக்கப்பட்டது. அன்று முதல் இன்றுவரை இக்கட்டிடம் எவ்வித பயனும் இன்றி உள்ளது. இப்பகுதியில் அதிக அளவு விவசாயிகள் உள்ளனர். விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களை விற்பனை செய்ய ஆரணி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கோ அல்லது கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கோ கொண்டு செல்கின்றனர்.
ஆரணிக்கு செல்ல வேண்டுமானால் 25 கிலோ மீட்டர் தூரமும், கலவைக்கு செல்வதென்றால் 15 கிலோமீட்டர் தூரமும் செல்ல வேண்டும். இதனால் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். எனவே மேல்புதுப்பாக்கம் கிராமத்தில் பயன்படாமல் இருக்கும் சமுதாய தானிய சேமிப்பு கிடங்கை சம்பந்தப்பட்ட வேளாண்மைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.