மாவட்ட செய்திகள்

“வாட்ஸ்-அப் பதிவுகள் சட்டத்துக்கு உட்பட்டவை”-மதுரை ஐகோர்ட்டு கருத்து

வாட்ஸ்-அப் பதிவுகள் சட்டத்துக்கு உட்பட்டவை என மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்தது.

மதுரை,

வாட்ஸ்-அப் பதிவுகள் சட்டத்துக்கு உட்பட்டவை என மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்தது.

ஐகோர்ட்டில் மனு

கரூரைச் சேர்ந்த வக்கீல் ராஜேந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கரூர் வக்கீல்கள் என்ற பெயரில் வாட்ஸ்-அப் குரூப் தொடங்கி அட்மினாக உள்ளேன். இந்த குரூப்பிலுள்ள ஒருவர் இரு சமூகங்களுக்கு இடையே பிரச்சினைக்குரிய வகையில் தகவல் பதிவிட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் என்னையும் சேர்த்துள்ளனர். சம்பந்தப்பட்ட நபரை எனது வாட்ஸ்-அப் குரூப்பில் இருந்து நீக்கிவிட்டேன். எனவே என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

சட்டத்துக்கு உட்பட்டது

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மனுதாரர் மீதான வழக்கு விசாரணை தொடர்பான தடயவியல் அறிக்கை வரவேண்டியுள்ளது. எனவே இந்த விஷயத்தில் முன்கூட்டியே தலையிட முடியாது. குழு உறுப்பினர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பணி, அட்மினை சார்ந்தது. ஆனால், வாட்ஸ்-அப் பதிவுகளை முறைபடுத்தவோ, மாற்றியமைக்கவோ, தணிக்கை செய்யவோ முடியாது. வாட்ஸ்-அப் குழு உறுப்பினர்களின் பதிவுகள் சட்டத்திற்கு உட்பட்டவைதான்.

உறுப்பினரின் பதிவிற்கு அட்மின் பொறுப்பாக முடியாது என ஒரு வழக்கில் ஏற்கனவே மும்பை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

இறுதி அறிக்கை

இதனால் மனுதாரர் அந்த குரூப்பின் அட்மின் மட்டுமே என்பது உறுதியானால், வழக்கின் இறுதி அறிக்கையில் அவரது பெயரை நீக்க வேண்டும். அவருக்கும் தொடர்பு இருப்பதற்கான போதுமான ஆவணங்கள் கிடைத்தால் மனுதாரரை வழக்கில் சேர்க்க வேண்டும். வழக்கை மனுதாரர் எதிர்கொள்ள வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.