திரு.வி.க. நகர்,
சென்னை ஐ.சி.எப். ஹவுசிங் போர்டு, காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆழ்வார் அம்மாள்(வயது 75). இவர், நேற்று முன்தினம் சிவராத்திரியை முன்னிட்டு இரவு முழுவதும் கண் விழிப்பதற்காக 3-வது மாடியில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் நாற்காலியில் அமர்ந்து இருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக நாற்காலி சரிந்ததில் மூதாட்டி ஆழ்வார் அம்மாள், 3-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆழ்வார் அம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி ஐ.சி.எப். போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டி தூக்க கலக்கத்தில் தவறி விழுந்தாரா? அல்லது யாரேனும் அவரை கீழே தள்ளி விட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.