மாவட்ட செய்திகள்

மயிலம் முருகன் கோவிலில் ஒரே நாளில் 300 ஜோடிகளுக்கு திருமணம்

மயிலம் முருகன் கோவிலில் நேற்று ஒரே நாளில் 300 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.

மயிலம்,

திண்டிவனம் அருகே உள்ள மயிலத்தில் மயில் போன்ற வடிவ மலை மீது பழமை வாய்ந்த முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இங்கு திருமணம் செய்தால் சிறப்பு என்பதால் முகூர்த்த நாட்களில் ஏராளமான ஜோடிகளுக்கு திருமணம் நடைபெறும்.

அந்த வகையில் நேற்று முகூர்த்த நாள் என்பதால் மலை மீது உள்ள முருகன் கோவில் மண்டபத்திலும், அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவிலிலும் 300 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.

சாமி தரிசனம்

இதில் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி சென்னை, கடலூர், காஞ்சீபுரம், திருச்சி, அரியலூர் மற்றும் புதுச்சேரி பகுதியை சேர்ந்த ஜோடிகள் திருமணம் செய்வதற்காக தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் இக்கோவிலுக்கு வந்திருந்தனர். மேலும் முருகனை தரிசனம் செய்யவும் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். நேற்று ஒரே நாளில் 300 ஜோடிகளுக்கு திருமணம் நடந்ததால் மயிலம் முருகன் கோவில் வளாகம் முழுவதும் புதுமண தம்பதிகளாலும், அவர்களது உறவினர்களாலும் நிரம்பி காணப்பட்டது.