மாவட்ட செய்திகள்

ராஜபாளையம் அருகே மூதாட்டி தற்கொலை; 2 போலீஸ்காரர்கள் உள்பட 6 பேர் மீது வழக்கு

மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட பிரச்சினையில் 2 போலீஸ்காரர்கள் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அழகுசுந்தரம் என்பவரது குடும்பத்துக்கும் இடத்தகராறு இருந்து வந்துள்ளது. இதில் மாரியப்பனின் மனைவி சின்னம்மாள்(வயது60) மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இடப்பிரச்சினையில் ஏற்பட்ட வேதனையால அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் இதற்கு காரணமான அழகுசுந்தரம் குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் வலியுறுத்தினர்.

சேத்தூர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு முற்றுகையிட முய்ற்சித்தனர். அவர்களுடன் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து சின்னம்மாளை தற்கொலைக்கு தூண்டியதாக அழகுசுந்தரம், அவரது மனைவி பாக்கியத்தாய், மகன் மணிராஜ், மனைவி சமுத்திரக்கனி, மகள்கள் அழகுராணி, தேவயானி ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவர்களில் மணிராஜ் ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்திலும் அழகுராணி சேத்தூர் போலீஸ் நிலையத்திலும் போலீஸ்காரர்களாக உள்ளனர்.