மாவட்ட செய்திகள்

மாயனூர் புதிய கட்டளைமேட்டு வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலி: நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்

மாயனூர் புதிய கட்டளைமேட்டு வாய்க்காலில் சக நண்பர்களுடன் குளித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

கரூர்,

நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை சேர்ந்த நடராஜன் (வயது 18). தச்சு வேலை செய்து வந்தார். இவர் தனது நண்பர்களான யுவராஜ் (19), பார்த்தீபன் (24), முத்து (24), முகமது ஆகியோருடன் தனது ஊரில் இருந்து கரூர் அருகே உள்ள மாயனூர் காவரி ஆற்றில் குளிப்பதற்காக நேற்று 2 மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.

பின்னர் மாயனூர் காவிரி ஆற்றில் குளிக்காமல், அதன் அருகே உள்ள புதிய கட்டளை மேட்டுவாய்க்காலில் இறங்கி நடராஜன் தனது நண்பர்களுடன் குளித்துள்ளார். அப்போது நடராஜன் திடீரென வாய்க்காலில் மூழ்கி தத்தளித்துள்ளார்.

இதைக்கண்ட சக நண்பர்கள் நடராஜனை காப்பாற்ற முயன்றும், சிறிது நேரத்தில் நடராஜன் நீரில் மூழ்கினார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்றனர்.

பின்னர் புதிய கட்டளைவாய்க்காலில் இறங்கி தேடியுள்ளனர். 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நடராஜன் பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து நடராஜனின் உடலை மாயனூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.