நொய்யல்,
புகழூர் நகராட்சியின் முதல் சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. நகராட்சி தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பிரதாபன், ஆணையர் கனிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தலைவர் குணசேகரன் பேசுகையில், புகழூர் நகராட்சியை பிளாஸ்டிக் இல்லா தூய்மையான நகராட்சியாக மாற்ற பாடுபடுவோம். அதன் முதற் கட்டமாக பராமரிப்பின்றி உள்ள சுகாதார வளாகங்களை மக்கள் பயன்படுத்தும் வகையில் மராமத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் நகராட்சி முழுவதும் பழுதடைந்துள்ள தெருவிளக்குகள் கணக்கெடுக்கப்பட்டு விரைவில் சரி செய்யப்படும். மேலும் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகள் நடப்படும். புகழூரை முதன்மை நகராட்சியாக மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம், என்றார்.
தொடர்ந்து நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வை வெற்றி பெற செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் மற்றும் புகழூர் மற்றும் காகித ஆலை பேரூராட்சிகளை இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுத்த அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது, நகராட்சியில் மற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான செலவினங்களை அங்கீகரிப்பது என்பன உள்பட 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தி.மு.க., அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க. உள்பட 21 கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தை 6-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கல்யாணி புறக்கணித்தார்.