மாவட்ட செய்திகள்

மூணாறு நிலச்சரிவில் இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ராஜலட்சுமி ஆறுதல்

மூணாறு நிலச்சரிவில் இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ராஜலட்சுமி ஆறுதல்.

சங்கரன்கோவில்,

கேரள மாநிலம் மூணாறு அருகே நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி, அங்கு தங்கியிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 55-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இறந்தனர். இதில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே புதுகிராமத்தைச் சேர்ந்த அண்ணாத்துரை, அவருடைய மனைவி தங்கம் என்ற பாக்கியமேரி, மகன் ஜோஸ்வா மற்றும் ராசய்யா ஆகியோரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் கேரள மாநிலத்துக்கு சென்று வருவதற்கு வருவாய் துறையினர் மூலம் தகுந்த ஏற்பாடுகளை செய்தார். இந்த நிலையில் அமைச்சர் ராஜலட்சுமி நேற்று புதுகிராமத்துக்கு சென்று, இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நிதி உதவி வழங்கினார்.

தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன், சங்கரன்கோவில் உதவி கலெக்டர் முருகசெல்வி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மூணாறு நிலச்சரிவில் இறந்த, நெல்லை மாவட்டம் மானூர் அருகே நடு பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் குடும்பத்தினரையும் அமைச்சர் ராஜலட்சுமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நிதி உதவி வழங்கினார்.