கோபி அருகே நடந்த வாகன சோதனையில் 3 வியாபாரிகளிடம் இருந்து ரூ.10 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.
வாகன சோதனை
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதன்காரணமாக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கவும், பரிசு பாருட்கள் வினியோகம் செய்வதை தடுக்கவும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன்படி கோபி அருகே உள்ள காசிபாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
சோதனையின்போது அந்த லாரியில் ரூ.9 லட்சத்து 70 ஆயிரம் இருந்ததை கண்டுபிடித்தனர்.
ரூ.10 லட்சம் பறிமுதல்
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த வியாபாரிகளான தமிழ்செல்வன் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் கர்நாடக மாநிலம் மைசூருக்கு டிராக்டர் வாங்க சென்றது, தெரியவந்தது. இதைத்தொடர்ந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 லட்சத்து 70 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதேபோல் கோபியை அடுத்த மொடச்சூர் பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது கேரள மாநிலம் ஏக்காபுரத்தை சேர்ந்த வாழைக்காய் வியாபாரியான சித்திக் என்பவர் ரூ.69 ஆயிரத்தை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அதிகாரிகள் கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
கோபி அருகே நடந்த வாகன சோதனையில் 3 வியாபாரிகளிடம் இருந்து ரூ.10 லட்சத்து 39 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.