மாவட்ட செய்திகள்

எழுமலை அருகே தலையில் கல்லைப்போட்டு தாய் கொலை, சொத்து தகராறில் வாலிபர் வெறிச்செயல்

எழுமலை அருகே சொத்து தகராறில் தலையில் கல்லைப் போட்டு தாயை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

உசிலம்பட்டி,

உசிலம்பட்டியை அடுத்த எழுமலை அருகே உள்ளது மல்லப்புரம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சின்ன வெள்ளை மனைவி வீரம்மாள் (வயது 56). இவருடைய மகன் தங்கச்சாமி (37). விவசாய கூலித்தொழிலாளி.

தங்கச்சாமி தனது தாய் வீரம்மாளிடம் அடிக்கடி சொத்தை கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் மீண்டும் சொத்தை பிரித்துக் கொடுக்கும்படி கேட்டு தங்கச்சாமி சண்டையிட்டுள்ளார். அப்போது வீரம்மாள் நான் இறந்த பின்னர் சொத்தை பிரித்து எடுத்துக்கொள், அதுவரை சொத்தை பிரித்துக் கொடுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் கொண்ட தங்கச்சாமி அருகில் கிடந்த கல்லை எடுத்து வீரம்மாளின் தலை மீது போட்டுள்ளார். இதில் தலை நசுங்கி வீரம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று வீரம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சொத்துக்காக பெற்ற தாயையே கொலை செய்த தங்கச்சாமியை எழுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.