மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்: என்ஜினீயரிங் மாணவர் பலி ஆழ்வார்திருநகரியில் பரிதாபம்

ஆழ்வார்திருநகரியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்தார்.

தென்திருப்பேரை,

மெஞ்ஞானபுரம் அருகே தாய்விளையைச் சேர்ந்தவர் கங்காதரன். இவருடைய மகன் கிருஷ்ண சுரேஷ் (வயது 19). இவர் தூத்துக்குடி அருகே உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் ஆழ்வார்திருநகரி வரையிலும் தனது மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு, பின்னர் அங்கிருந்து பஸ்சில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம்.

இவர் நேற்று மாலையில் வழக்கம்போல் கல்லூரி முடிந்ததும், பஸ்சில் ஆழ்வார்திருநகரிக்கு வந்தார். பின்னர் கிருஷ்ண சுரேஷ் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். ஆழ்வார்திருநகரி-நாசரேத் ரோடு முஸ்லிம் படித்துறை அருகில் சென்றபோது, எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அப்போது அந்த 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ண சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். பின்னர் அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு, தப்பி சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மகுமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் இறந்த கிருஷ்ண சுரேஷின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.