மாவட்ட செய்திகள்

நாட்டறம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; பெண் பலி பெங்களூருவை சேர்ந்தவர்கள் உள்பட 8 பேர் படுகாயம்

நாட்டறம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாட்டறம்பள்ளி,

விபத்தில் பெண் பலி

திருப்பத்தூரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40), கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுஜாதா (35). இவர்களுக்கு காயத்திரி (13) என்ற மகளும், கணேசன் (10) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் திருப்பத்தூரில் இருந்து வெலக்கல்நத்தத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

வெலக்கல்நத்தம் கூட்ரோடு என்ற சாலையை கடக்கும்போது, பெங்களூருவில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி சென்ற கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு, கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி நின்றது. இந்த விபத்தில் சுஜாதா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இந்த விபத்தில் வெங்கடேசன், காயத்திரி, கணேசன் மற்றும் காரில் பயணம் செய்த பெங்களூருவை சேர்ந்த கருணாநிதி (56), அர்ச்சுனன் (66), பாஸ்கரன் (35), மணவாளன் (46), கார் டிரைவர் கருணாகரன் (36) ஆகிய 8 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்கள் 8 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.