மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் அருகே, மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

சாத்தான்குளம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.

சாத்தான்குளம்,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை நடுத்தெருவை சேர்ந்தவர் கிளேட்டன். இவருக்கு 2 மகன்கள். மூத்த மகன் மரியடினாப் (வயது 26). பி.இ. முடித்துவிட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருந்தார்.

நேற்று காலையில் மரியடினாப் தனது வீட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குடில் அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது குடிலில் அலங்கார மின்விளக்குகள் வைத்து கொண்டு இருந்தார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக மரியடினாப் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தட்டார்மடம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.