மாவட்ட செய்திகள்

பெரும்பாலை அருகே, வாழை தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம் - பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

பெரும்பாலை அருகே வாழை தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்தன. இதனை பொதுமக்கள் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

ஏரியூர்,

தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அடுத்துள்ள பெத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னு, விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார். இந்தநிலையில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வந்த 2 யானைகள் தோட்டத்தில் புகுந்து வாழை மரங்களை மிதித்தும், தின்றும் அட்டகாசம் செய்தன.

நாய்கள் தொடர்ந்து குரைக்கும் சத்தம் கேட்டு சின்னு மற்றும் கிராமமக்கள் வந்து பார்த்த போது 2 யானைகள் தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் தீப்பந்தம் கொளுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் யானைகளை விரட்டினர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 2 யானைகளும் ஒன்டிக்கோட்டை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

இதுகுறித்து பென்னாகரம் வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கிராமமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து யானைகளால் சேதமடைந்த வாழை மரங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பொதுமக்கள் கூறுகையில், கோடை காலங்களில் கடும் வறட்சி நிலவுவதால், வனப்பகுதியில் உள்ள காட்டுப்பன்றி, மான் மற்றும் யானை போன்ற வனவிலங்குகள் கிராம பகுதிக்குள் புகுந்து, விளைநிலத்தில் உள்ள பயிர்களை நாசம் செய்கின்றன.

வன விலங்குகளால் சேதமடைந்த வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் யானைகள் விளைநிலங்களில் புகுவதை தடுக்க கிராமத்தை சுற்றி அகழி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.