திண்டிவனம்,
திண்டிவனம் அருகே அம்மணம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட மத்திய குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மத்திய குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் உள்ளிட்ட போலீசார் அம்மணம்பாக்கத்துக்கு விரைந்து வந்து, தகவல் கொடுத்தவர் கூறிய அந்த வீட்டுக்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள ஒரு அறையில் அட்டை பெட்டிகளில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 1,440 மதுபாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்தது தொடர்பாக அம்மணம்பாளையத்தை சேர்ந்த பாபு என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.