திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள கீழ்மணம்பேடு கிராமத்தில் அரசு பள்ளி அருகே தனியார் வங்கி ஏ.டி.எம் மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம் மையத்திற்கு காவலாளி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் அந்த ஏ.டி.எம் மையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம் வெளியேயும், உள்ளேயும் இருந்த கண்காணிப்பு கேமராவை நொறுக்கி ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றனர்.
அப்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த அலாரம் அடித்ததால் பதறிபோன கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு தப்பிச்சென்றனர்.
இதன் காரணமாக அந்த ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்த லட்சக்கணக்கான பணம் கொள்ளை சம்பவத்தில் இருந்து தப்பியது. இது குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். சம்பவ இடத்திற்கு திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் நேரில் பார்வையிட்டு அந்த பகுதியில் உள்ளவர்களிடம் இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டார்.
மேலும் கொள்ளை முயற்சி நடைபெற்ற ஏ.டி.எம். மையத்தில் கைரேகை நிபுணர்களும், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் அருகே வங்கி ஏ.டி.எம். உடைத்து பணம் திருட முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.