மாவட்ட செய்திகள்

விருத்தாசலம் அருகே லாரி தனியார் பஸ் மோதல்

விருத்தாசலம் அருகே லாரி தனியார் பஸ் மோதல் டிரைவர் உள்பட 21 பேர் காயம்

விருத்தாசலம்

விருத்தாசலத்தில் இருந்து நேற்று காலை 7 மணி அளவில் சிதம்பரம் நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பொன்னேரி ரவுண்டானா அருகில் வந்த போது, நெய்வேலியில் இருந்து சாம்பல் ஏற்றிக்கொண்டு அரியலூர் நோக்கி வந்து கொண்டிருந்த டாரஸ் லாரி பஸ் மீது மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த 20 பேர் காயமடைந்தனர். லாரியை ஓட்டி வந்த நெய்வேலி அருகே உள்ள ஊத்தங்கால் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் வேல்ராஜ் என்பவரின் கால் விரல்கள் துண்டிக்கப்பட்டு படுகாயம் அடைந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் அடிக்கடி விபத்து நடைபெறுவதால் அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.