மாவட்ட செய்திகள்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஏற்காட்டில் நீலமலை தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு அமல்படுத்தியுள்ள பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஏற்காடு பஸ் நிலையம் அருகே நீலமலை தோட்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏற்காடு,


தமிழக அரசு அமல்படுத்தியுள்ள பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஏற்காடு பஸ் நிலையம் அருகே நீலமலை தோட்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க பொதுச்செயலாளர் நல்லமுத்து தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தோட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், பஸ் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து நீலமலை தோட்ட தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் நல்லமுத்து கூறியதாவது:

தமிழ்நாடு அரசு தற்போது அறிவித்துள்ள பஸ் கட்டண உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மலை பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். மலைவாழ் மக்களுக்காக ஏற்காடு சட்டமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது. இங்கு வசதியில் மிகவும் பின்தங்கிய மக்களே அதிகளவில் வசிக்கிறார்கள். ஆனால் மலை பகுதிக்கு இரு மடங்கு பஸ் கட்டணம் உயர்த்தியிருப்பது ஏற்காடு போன்ற மலைப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்களை மிகவும் பாதித்துள்ளது. தங்களது ஒருநாள் வருமானத்தில் பஸ்சுக்காக ரூ.25 செலவு செய்ய வேண்டியுள்ளது. எனவே, பஸ் கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.