புதுடெல்லி,
பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள், ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி பாக்கித்தொகையை (ஏ.ஜி.ஆர். என்று அழைக்கப்படுகிற உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணம் உள்ளிட்டவை) மத்திய அரசுக்கு செலுத்துமாறு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந் தேதி உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து ஏர்டெல், வோடபோன் ஐடியா, டாடா டெலிசர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தவணைகளாக பாக்கித்தொகையை செலுத்த தொடங்கின.
பார்தி ஏர்டெல் நிறுவனம், ரூ.35 ஆயிரத்து 586 கோடி பாக்கி வைத்துள்ளதாக தொலைத்தொடர்புத்துறை கூறுகிறது. இதில் உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணம், அபராதம் மீதான வட்டி உள்ளிட்டவை அடங்கும்.
இந்த நிறுவனம், கடந்த 17-ந் தேதி மத்திய அரசுக்கு ரூ.10 ஆயிரம் கோடியை செலுத்தியது.
இந்த நிலையில் இந்த நிறுவனம் மத்திய அரசுக்கு மேலும் ரூ.8,004 கோடி செலுத்தி உள்ளதாக நேற்று கூறியது.
இது தொடர்பாக தாக்கல் செய்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பாரதி ஏர்டெல் நிறுவனம் கடந்த 17-ந் தேதி ரூ.10 ஆயிரம் கோடியை செலுத்திய நிலையில், மேலும் ரூ.3,004 கோடியை செலுத்தி உள்ளது. இதன் மூலம் முழு மற்றும் இறுதித்தொகை செலுத்தியாகி விட்டது. இதன் மூலம் சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி பிறப்பித்த உத்தரவை நாங்கள் நிறைவேற்றி விட்டோம்.
அத்துடன் தற்காலிக கட்டணம் வகையில் ரூ.5,000 கோடியை டெபாசிட் செய்துள்ளோம்.
சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (ஏ.ஜி.ஆர்.) உத்தரவின்படி, எங்கள் நிறுவனம் 2006-07 நிதி ஆண்டில் இருந்து 2019 டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை சுயமதிப்பீட்டை செய்தது. மேலும் 2020 பிப்ரவரி 29-ந் தேதி வரையில் வட்டியும் செலுத்தியது என்று அதில் கூறப்பட்டு உள்ளது.