கடத்தூர்.
கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் குளித்து மகிழ்வதாற்காக சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள். குறிப்பாக திருப்பூர், கோவை, சேலம் மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் விடுமுறையில் வந்து பொழுதை கழிப்பார்கள்.
இந்தநிலையில் நேற்று ஆங்கில புத்தாண்டு விடுமுயையொட்டி நேற்று காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தார்கள். இளைஞர்கள் பலர் இருசக்கர வாகனங்களில் வந்திருந்தார்கள்.
இந்தநிலையில் பவானிசாகர் அணை தன் முழுக்கொள்ளவை எட்டி உள்ளது. அதனால் அணையில் இருந்து பவானி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதனால் கொடிவேரி அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து சீறிப்பாய்ந்து செல்கிறது.
இதன்காரணமாக பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் சுற்றுலா பயணிகளை அணைக்குள் சென்று குளிக்க அனுமதிக்கவில்லை. முன்பக்க கதவை மூடி, தடை விதித்திருந்தார்கள். இதனால் கொடிவேரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்கள். சிலர் தூரமாக நின்று தங்களுடைய செல்போனில் அணையை படம் பிடித்தார்கள்.