கவுகாத்தி,
இந்தியாவில் பல்வேறு முகாம்களில் உள்ள ரோஹிங்யா இஸ்லாமியர்கள் 40 ஆயிரம் பேரை வெளியேற்ற இந்திய அரசு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. ரோஹிங்யா அகதிகளின் பயோமெட்ரிக் தகவல்கள் பெற மாநிலங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது, விரைவில் அது மியான்மருக்கு அனுப்பப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். இந்தியாவில் உள்ள 14 ஆயிரம் ரோஹிங்யாக்கள் மட்டுமே ஐ.நா. விதிமுறைகளின்படி பதிவு செய்யப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 7 ரோஹிங்யா இஸ்லாமியர்களை இந்தியா மியான்மருக்கு நாடு கடத்துகிறது. அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து 7 பேரும் மனிப்பூர் மாநிலம் இம்பாலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து மியான்மர் எல்லை 50 கிலோ மீட்டர் தொலைவாகும். மியான்மர் அரசிடம் இருந்து பயணத்திற்கான ஆவணங்களும் பெறப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 2012-ம் ஆண்டு இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது சாசாரில் கைது செய்யப்பட்டவர்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது வழக்கமான நடவடிக்கையாகும். நாங்கள் ஒரு பாகிஸ்தானரையும், ஒரு ஆப்கானிஸ்தான் நாட்டவரையும், 52 வங்காளதேசத்தினரையும் சமீபத்தில் நாடு கடத்தியுள்ளோம், என கூறியுள்ளார் அசாம் காவல்துறையின் எல்லைப்பிரிவு அதிகாரி பாஸ்கர் ஜோதி மகான்தா.