மாவட்ட செய்திகள்

உசிலம்பட்டி அருகே அனுமதியின்றி நடத்திய காப்பகத்திலிருந்து 18 குழந்தைகள் மீட்பு

உசிலம்பட்டி அருகே அனுமதியின்றி நடத்திய காப்பகத்திலிருந்து 18 குழந்தைகளை அதிகாரிகள் மீட்டனர்.

உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது பெரியசெம்மேட்டுப்பட்டி. இந்த ஊரில் கடந்த 11 ஆண்டுகளாக அரசு அனுமதியின்றி தேவபிச்சை என்பவர் குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று இதே ஊரில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் நடைபெற்ற 100 நாள் வேலை பணிகளை ஆய்வு செய்வதற்காக உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சுகன்யா சென்றிருந்தார். அப்போது அந்த பகுதியில் இயங்கி வந்த குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று, குழந்தைகளுக்கு தேவையான சுகாதார ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தார்.

மேலும் குழந்தைகள் காப்பகம் நடத்த முறையான உரிமம் பெறப்பட்டுள்ளதா என்று தேவபிச்சையிடம் விசாரித்தார். அதில் முறையான உரிமம் இன்றி அவர் காப்பகம் நடத்தி வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து ஆர்.டி.ஓ. மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவிற்கு தகவல் தெரிவித்தார்.

குழந்தைகள் மீட்பு

கலெக்டரின் உத்தரவின் பேரில் சமூக பாதுகாப்பு துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விவிலியராஜ் மற்றும் அலுவலர்கள், தாசில்தார் ராமச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் பத்மநாதன் ஆகியோர் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள 18 குழந்தைகளை (14 பெண் குழந்தைகள், 4 ஆண் குழந்தைகள்) மீட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். மீட்கப்பட்ட குழந்தைகள் அனைவரின் பெற்றோர்களை வரவழைத்து விருப்பப்பட்டவர்களின் குழந்தைகளை பெற்றோர்களிடமே ஒப்படைக்கப்படும் என்றும் மற்றவர்களை முறையாக அனுமதி பெற்று இயங்கி வரும் குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.