மாவட்ட செய்திகள்

கோத்தகிரி அருகே இறந்து கிடந்த 2 சிறுத்தைகள்

கோத்தகிரி அருகே 2 சிறுத்தைகள் இறந்து கிடந்தன.

கோத்தகிரி

கோத்தகிரி வனச்சரகர் சிவா தலைமையில், வனத்துறை ஊழியர்கள், சோலூர்மட்டம் அருகே உள்ள தேனாடு வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு துர்நாற்றம் வீசியுள்ளது. அருகில் சென்று பார்த்தபோது, 2 சிறுத்தைகள் அழுகிய நிலையில், இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி மாவட்ட வன அலுவலர் சச்சின், உதவி வன அலுவலர் சரவணகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். தொடந்து முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் மற்றும் கோத்தகிரி கால்நடை மருத்துவர் ராஜன் ஆகியோர் இறந்த சிறுத்தைகளின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பிறகு, சிறுத்தையின் உடல்கள் அதே பகுதியில் எரிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இறந்து கிடந்தது, 7 வயதுடைய பெண் சிறுத்தை மற்றும் 5 வயது மதிக்கத்தக்க பாலினம் தெரியாத வகையில், உடல்கள் அழுகிய நிலையில் இருந்த மற்றொரு சிறுத்தை ஆகும். அவற்றின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உடல் கூறுகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வறிக்கை முடிவுகள் வந்த பின்னரே சிறுத்தைகளின் இறப்புக்கான காரணம் தெரிய வரும் என்றனர்.