மாவட்ட செய்திகள்

ரூ.400 லஞ்சம் வாங்கிய வழக்கு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பெண் ஊழியருக்கு 1½ ஆண்டு ஜெயில் கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு

ரூ.400 லஞ்சம் வாங்கிய வழக்கில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக ஊழியருக்கு 1½ ஆண்டு சிறை தண்டனை

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தர்கா அண்ணாமலை நகரை சேர்ந்தவர் அனிதா (வயது 26). இவர் தூத்துக்குடியில் உள்ள தனது வேலைவாய்ப்பு பதிவை கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மாற்றிட கோரி கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு கொடுத்தார்.

அப்போது அங்கு பணியில் இருந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இளநிலை உதவியாளர் பூவையம்மாள் (49) என்பவர், அவ்வாறு மாற்றிட ரூ.400 லஞ்சம் கேட்டார். இதுகுறித்து அனிதா கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின்பேரில் பூவையம்மாளிடம் ரூ.400ஐ அனிதா வழங்கினார். அப்போது போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இந்த வழக்கு கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி ஜீவானந்தம் தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், ரூ.400 லஞ்சம் வாங்கிய பூவையம்மாளுக்கு 1 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.400 அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார். பூவையம்மாள் தற்போது சென்னையில் உள்ள வேலைவாய்ப்பு இயக்குனரகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.