வசாய்,
தானேயில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியதாக மாநகராட்சி அதிகாரி, டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டிட அனுமதிக்கு லஞ்சம்
தானே மாவட்டம் பயந்தர் மேற்கு உத்தன் பகுதியை சேர்ந்த ஒருவர் தனது நிலத்தில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள மிரா-பயந்தர் மாநகராட்சியில் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இவரது மனுவை வார்டு அதிகாரி சுவப்னில் சாவந்த் கிடப்பில் போட்டதாக தெரிகிறது. இதையடுத்து அந்த நபர் மாநகராட்சி அலுவலத்திற்கு சென்று இதுகுறித்து விசாரித்து உள்ளார். அப்போது அவரை சந்தித்த வார்டு அதிகாரியின் டிரைவர் ராஜூ ரூ.3 லட்சம் தந்தால் கட்டிடம் கட்ட அனுமதி வாங்கி தருவதாக தெரிவித்தார்.
அதிகாரி, டிரைவர் கைது
இதையடுத்து அந்த நபர் முதல் கட்டமாக ரூ.1 லட்சத்தை லஞ்சமாக அவரிடம் கொடுத்தார். இந்தநிலையில் மீதி பணத்தை கேட்டு டிரைவர் ராஜூ தொல்லை கொடுத்து வந்தார். இதனால் எரிச்சல் அடைந்த அந்த நபர், இது குறித்து தானே லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின்பேரில் நேற்று மாநகராட்சி அதிகாரியின் டிரைவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின்பேரில் வார்டு அதிகாரி சுவப்னில் சாவந்தும் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த லஞ்சஒழிப்பு போலீசார் அவர்களது வீடுகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.