ஊட்டி,
ஊட்டி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 36 வார்டுகளிலும் உள்ள வீடுகள், விடுதிகள், காட்டேஜ்கள், ஓட்டல்களில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் அல்லது மக்காத குப்பைகள் என தனித்தனியாக தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் பொது இடங்களில் வைக்கப்பட்ட குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டன.
இதன் மூலம் குப்பை இல்லாத நகரமாக ஊட்டியை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் ஊட்டியில் மண்டலம் வாரியாக பிரித்து சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் ஊட்டியில் பொது இடங்களில் குப்பைகள் கொட்டப்படுகிறதா? என்று சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது சேரிங்கிராஸ், ஹில்பங்க் உள்ளிட்ட பகுதிகளில் 3 தங்கும் விடுதிகள் முன்பு சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து குப்பை கொட்டியதற்காக ரூ.2,000, ரூ.1,000, ரூ.500 என மொத்தம் ரூ.3,500 அபராதம் விதித்து அதிகாரிகள் வசூலித்தனர்.அடுத்த மாதம் கோடை சீசன் தொடங்க உள்ளதால், சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும். எனவே குப்பைகளை முறையாக பிரித்து வழங்க வேண்டும் என்று அறிவுத்தப்பட்டு உள்ளது.