கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டகலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2021-2022-ம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் மத்திய அரசு நிதி ஆதரவிலான போஸ்ட் மெட்ரிக் 10-ம் வகுப்புக்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளுக்கும் கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் ப்ரிமெட்ரிக் 9 மற்றும் 10-ம் வகுப்புகள் ஆகிய திட்டங்களுக்குரிய இணையதளம் கடந்த 13-ந் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற தகுதியுள்ள பழங்குடியின மாணவர்கள் புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் பெற்று அதனை பூர்த்தி செய்து சாதிச்சான்று, வருமானச்சான்று, மதிப்பெண் பட்டியல், சேமிப்பு கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட பிற ஆவணங்களுடன் வருகிற 13-ந் தேதிக்குள் escholarship.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க கல்வி நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்குரிய கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்திடவும், மாணவர்கள் சார்பான விண்ணப்பங்களை எவ்வித தவறுகளின்றி, பதிவேற்றம் செய்து குறித்த காலகெடுவுக்குள் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.