பெங்களூரு,
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. கர்நாடகத்தில் 243 மையங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் கொரோனா தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவர் டாக்டர் சுதர்சன் தடுப்பூசி போட்டுக் கொண்டார். தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கொரோனா தடுப்பூசியை நான் போட்டுக் கொண்டேன். அது பாதுகாப்பானது. அதன் மீது யாருக்கும் சந்தேகம் வேண்டாம். மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நான் தடுப்பபூசியை முதல் நாளில் போட்டுக் கொண்டேன். எனக்கு எந்த பக்க விளைவுகளும் உண்டாகவில்லை.
ஆனால் இந்த தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் 45 நாட்களுக்கு மது அருந்தக்கூடாது. மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தடுப்பூசியை போட்டுக்கொண்ட பிறகு மது அருந்தினால், தடுப்பூசியின் செயல் திறன் குறைய வாய்ப்பு உள்ளது.
மற்றபடி சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. உணவு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. விரும்பும் உணவுகளை சாப்பிடலாம். இவ்வாறு சுதர்சன் கூறினார்.