பரமக்குடி,
பரமக்குடி மரைக்காயர் பட்டிணத்தில் இரும்பு கடை நடத்தி வருபவர் ஜெயபாண்டியன் (வயது52). இவரது கடையில் பரமக்குடி பாலன் நகரை சேர்ந்த கரண் (20) என்பவர் லோடுமேனாக வேலைக்கு சேர்ந்துள்ளார். வேலைக்கு சேர்ந்த அன்று இரவே பூட்டிக்கிடந்த ஜெயபாண்டியன் கடையை உடைத்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். மறுநாள் காலையில் வழக்கம் போல் கடையை திறக்க வந்த ஜெய பாண்டியன் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்த நிலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்பு கடையின் முன்னால் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது கடையில் வேலைக்குச் சேர்ந்த லோடுமேன் கரண் பூட்டை உடைத்து திருட முயன்ற காட்சி பதிவாகி உள்ளது. உடனே விஜயபண்டியன் பரமக்குடி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் வழக்குப்பதிவு செய்து கரணை கைது செய்துள்ளார்.