மாவட்ட செய்திகள்

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சியில் குடிநீர் கேட்டு காலிக்குடங் களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சி,

திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிக்கு கடந்த ஒருவாரமாக குடிநீர் சரியாக வரவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் நேற்று காலிக்குடங்களுடன் மல்லிகை புரம் மெயின்ரோட்டில் திரண்டனர். அவர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பாலக்கரை போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது, உடனடியாக லாரி மூலம் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

SCROLL FOR NEXT