மாவட்ட செய்திகள்

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

ஓமலூர்:-

ஓமலூரை அடுத்த பொம்மியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் காவேரி. இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 29). இவர் சென்னை ஆவடியில் போலீசாக பணியாற்றி வருகிறார். இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மருதம் பகுதியை சேர்ந்த வேம்பையா மகள் ரம்யா (23). இவரும் சென்னை ஆவடி போலீசாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஒரே இடத்தில் போலீசாக பணியாற்றி வந்ததால், அவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. கடந்த ஒரு வருடமாக 2 பேரும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த ரம்யாவின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதையடுத்து கார்த்திகேயன்-ரம்யா காதல் ஜோடி சென்னையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு தீவட்டிப்பட்டி போலீசில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் இருவீட்டு பெற்றோரையும் அழைத்து சமரசம் செய்து வைத்தனர்.